அத்தாவர விரல்களை விட்டுவிட்டு வராதே

இந்தியாவில் இந்த முறை பல நண்பர்கள், விட்டுவந்த உறவுகளை சந்திக்க முடிந்தது. எல்லாரிடமும் ஒரு மணி ரெண்டு மணி நேரங்கள். நலவிசாரிப்புகள், தினவாழ்க்கை சக்கரங்களைப் பகிர்வதற்குள் அடுத்தகட்ட அழுத்தங்களில் அவரவர். யாருமில்லை யாருக்கும். கூதிர்காலச் சிலைகள் போல பளீரென தோன்றும் சில சித்திரங்கள் பால்யத்தை நினைவூட்டின. சிறு நகர காலைகள் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியரால் நிரம்பியிருந்தது. வழியச் செல்லும் ஆட்டோக்களில் பள்ளிச்சீருடைகள் சிரிப்பை அணிந்து சென்றபடி இருந்தன.கனத்த புத்தக மூட்டைகளில் நெல்லிக்காய்களிடையே நேற்று சேகரித்த நட்பும் சண்டையும் கலந்திருக்குமா? பாரபட்சமற்ற வெயிலில் விபூதி பட்டைகள் கரைந்திருப்பது அறியாது தெப்பகுளத்தைச் சுற்றுவது போல நெற்றியைச் சுற்றி துடைத்துக்கொள்ளும் சிறுவர்கள். கூட்டத்தில் எங்கோ என் நண்பனையும், நான் எங்கோ பார்த்த நன்கறிந்த மற்றொருவனும் கலந்து செல்லும் சித்திரம். நானே உள்ளிருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்த சிறுவனின் நடை என்னை விட்டு நீங்கவில்லை. அத்தனை இயல்பு அதே சமயம் அந்த வயதில் மட்டுமே சாத்தியமாகும் வெகுளித்தனம். பெரியவனாக ம...